கொரோனாவின் நான்காவது அலையை எதிர்கொள்ள தயாராகிறோம்: ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்
கடந்த ஆண்டைப் போலில்லாமல், இந்த ஆண்டு தான் ஏற்கனவே நான்காவது அலையை எதிர்கொள்ள தயாராக நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, முன்கூட்டியே கொரோனா பரவல் அபாயம் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும், நான்காவது அலையைத் தவிர்ப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கமுடியுமோ, அனைத்தையும் எடுக்க விரும்புவதாகவும் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய Spahn, நான் ஏற்கனவே நிபுணர்களுடனும், Robert Koch நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். சென்ற ஆண்டு கோடையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், செப்டம்பர் அக்டோபரில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியதை மனதில் வைத்தே இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார் அவர்.
அப்படி கொரோனா குறைந்துவிட்டது என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராமல் திடீரென 2020 நவம்பரில் கொரோனா பரவியதால் நாடு பொதுமுடக்கத்தை சந்திக்க நேர்ந்ததுடன், கட்டுப்பாடுகள் அரை ஆண்டு வரை நீட்டிக்கப்படவேண்டியதாயிற்று.
ஜேர்மனியில் தற்போதுள்ள சூழல் திருப்தியளிப்பது உண்மைதான் என்று கூறியுள்ள Spahn, நல்ல மன நிலைமை காணப்படுகிறது, கொரோனா பரவல் குறைந்துள்ளது, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், பிரித்தானியா போன்ற நாடுகளைப் பார்க்கும்போது, எந்த நேரமும் விரைவாக
பிரச்சினை உருவாகி விடலாம் என்பது தெரியவந்துள்ளதால் நாம் கவனமாக இருப்பதே
நல்லது என்கிறார் அவர்.