முக்கிய மாநாடு: இலங்கையை புறக்கணித்த அமெரிக்க ஜனாதிபதி பைடன்
இணையமூடாக முன்னெடுக்கப்படவிருக்கும் ஜனநாயக மாநாடிற்கு அழைப்பு விடுக்காமல் இலங்கையை புறக்கணித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இணையமூடாக நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஜனநாயக மாநாடு ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
குறித்த மாநாட்டிற்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா, ரஷ்யா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுடன் இலங்கையும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட 110 நாடுகளில் தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் அடங்கும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் பகிரங்கப்படுத்தப்பட்ட பங்கேற்கும் நாடுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் டிசம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருக்கும் குறித்த மாநாட்டில் மக்கள் பிரதிநிதிகள், அரசு தலைவர்கள், தனியார்த்துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படுவதோடு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனிநபர் மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்த கருத்துகளை முன்வைக்க தலைவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.