போரிஸ் ஜான்சனுக்கு பதில் இவர் பிரதமராகவேண்டும்: பிரித்தானிய பிரதமருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
சமீபத்தில் பிரித்தானியாவில் ஒரு திரை மறைவு அரசியல் சம்பவம் நிகழ்ந்தது...
அது என்னவென்றால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சேன்ஸலரான ரிஷி சுனக்கை சுகாதாரச் செயலராக பதவியிறக்கம் செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
சேன்ஸலர் ரிஷி சுனக், கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி எழுதிய ஒரு கடிதம் ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டதாக ஒரு புகார் எழுந்தது.
அதனால் கோபமடைந்த போரிஸ் ஜான்சன் பல அலுவலர்கள் முன்னிலையில் ரிஷி சுனக்கை சுகாதாரச்செயலராக பதவியிறக்கம் செய்துவிடுவதாக மிரட்டியதாக தகவல் வெளியானது.
ஆனால், மக்கள் எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது.
அவர்கள், போரிஸ் ஜான்சன் நீண்ட காலத்துக்கு பிரதமர் பதவியில் நீடிக்கமாட்டார் என்று நினைக்கிறார்கள். ஆக, அப்படி அவர் பதவியிலிருந்து விலகும்போது அவருக்கு பதில் ரிஷி சுனக் பிரதமராக வேண்டும் என பிரித்தானிய மக்கள் விரும்புகிறார்கள்.
அதுவும், அடுத்த 12 மாதங்களுக்குள் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக ரிஷிசுனக் பிரதமராக பதவி ஏற்கவேண்டும் என 47 சதவிகித கன்சர்வேட்டிவ் கட்சியினர் கருதுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் pollsters JL Partners என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து, போரிஸ் ஜான்சனைவிட ரிஷி சுனக் அறிவிலும், திறமையிலும், நம்பகத்தன்மையிலும் சிறந்து விளங்குவதாக மக்கள் கருதுவது தெரியவந்துள்ளது.
மொத்தத்தில் 42 சதவிகிதம் பிரித்தானியர்கள் ரிஷி ஜான்சனைவிட சிறந்த பிரதமராக இருப்பார் என கருதுகிறார்கள். போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளவர்கள் 24 சதவிகிதத்தினர் மட்டுமே.
போரிஸ் ஜான்சன் பதவி விலகும்போது ரிஷி பிரதமரக பதவியேற்கவேண்டும் என்று விரும்புபவர்கள் 56 சதவிகிதத்தினர். அப்படி விரும்பாதவர்கள் 18 சதவிகிதத்தினர் மட்டுமே.
கன்சர்வேட்டிவ் கட்சியினரில் 11 சதவிகிதம் பேர், இப்போதே ரிஷி பிரதமராகவேண்டும் என விரும்புகிறார்கள், 36 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் போரிஸ் ஜான்சனுக்கு பதில் ரிஷி பிரதமராகவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
அதைவிட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் என்னவென்றால், பிரித்தானியர்களில் ஐந்தில் நான்கு பேர் (77 சதவிகிதத்தினர்), அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரிஷிக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படவேண்டும் என விரும்புவதுதான்.
ஆக, தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, போரிஸ் ஜான்சன் ரிஷியை பதவியிறக்கம் செய்வதாக மிரட்டி, வாயை விட்டு மாட்டிக்கொண்டார். ரிஷியின் ஆதரவாளர்களோ அவரை தொடக்கூட முடியாது என்கிறார்கள். காரணம் மக்கள் ஆதரவு ரிஷிக்குதான்.