அம்மாவின் பணத்தில் வாழ்வதாக கூறிய இளவரசர் ஹரி... உண்மையில்லை என நிரூபித்த அரண்மனை கணக்கு வழக்குகள்
மேகனுடன் அரண்மனையிலிருந்து வெளியேறிய பின் யாரும் நிதியுதவி செய்யவில்லை, அம்மாவின் பணம் இருப்பதால்தான் சமாளிக்கிறோம் என்று கூறியிருந்தார் பிரித்தானிய இளவரசர் ஹரி.
ஆனால், ஹரியின் கூற்றுக்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முதன்முறையாக அரண்மனை கணக்கு வழக்குகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இளவரசர் சார்லஸ் தன் பிள்ளைகளுக்காக என ஒதுக்கப்பட்டிருந்த பணத்திலிருந்து கணிசமான ஒரு தொகையை தொடர்ந்து ஹரி மேகன் தம்பதிக்கு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
2020 கோடை வரை, இளவரசர் சார்லஸ் ஹரிக்கும் மேகனுக்கும் 4.4 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளதாக அந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஹரி ஓபராவுக்கு அளித்த பேட்டியின்போது, கடந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே தன் குடும்பத்திலிருந்து தனக்கு நிதியுதவி வருவது நின்றுவிட்டது என்று கூறியிருந்தார்.
அத்துடன், ஒரு படி மேலே போய், தன் தாயாகிய இளவரசி டயானா தனக்காக விட்டுச் சென்ற பணம் இருப்பதால்தான் சமாளிக்கிறோம் என்றும் கூறியிருந்தார் இளவரசர் ஹரி. ஆனால், அரண்மனை கணக்கு வழக்குகள், ஹரியும் மேகனும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே அரண்மனையிலிருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், இளவரசர் சார்லஸின் வருவாயிலிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் இன்னமும் அவர்கள் பெயர் இருப்பதைக் காட்டியுள்ளன.
அரண்மனை மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, எங்களுக்குத் தெரிந்தவரை, 2020 ஜனவரியில் இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தபோது, ஹரி தாங்கள் சொந்தக்காலில் நிற்கப்போவதாக கூறியிருந்தார்.
அப்போது, ஹரிக்கு அந்த சூழலில் உதவுவதற்காக, இளவரசர் சார்லஸ் ஒரு கணிசமான தொகையை ஒதுக்கினார். அந்த நிதியுதவி, கடந்த கோடையில்தான் நிறுத்தப்பட்டது என்கிறார்.