மகாராணியாரை மீண்டும் அவமதித்துள்ள இளவரசர் ஹரி: கோபத்தின் உச்சத்தில் பிரித்தானிய ராஜ குடும்பம்...
பிரித்தானிய இளவரசர் ஹரி செய்துள்ள ஒரு செயல் பிரித்தானிய மகாராணியாரை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளதையடுத்து, ராஜ குடும்ப உறுப்பினர்கள் கோபத்தில் கொந்தளித்துப்போயுள்ளார்கள்.
ஏற்கனவே ஓபரா பேட்டியில் ராஜ குடும்பத்தை அவமதிக்கும் வகையில் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்ட தகவல்கள் ராஜ குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்ததுடன், ஹரிக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தின. இந்நிலையில், ஹரி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில் ஓபரா பேட்டியின்போது கூறப்பட்ட மற்றும் விடையளிக்கப்படாத பல தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹரியின் மகன் ஆர்ச்சியின் தோல் எவ்வளவு கருப்பாக இருக்கும் என்று ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேட்டதாக ஹரி மேகன் தம்பதியர் ஓபரா பேட்டியில் தெரிவித்திருந்தார்கள்.
இப்போது ஹரி வெளியிட இருக்கும் புத்தகத்தில் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்தவர் யார் என்ற கேள்விக்கான விடை முதலான பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கும் என்ற அச்சம் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால், அரண்மனை பதற்றத்தில் இருகிறது. ராஜ குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்துள்ள மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஹரி அந்த புத்தகத்தை அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தின்போது வெளியிட இருக்கிறாராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால், அடுத்த ஆண்டு, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், பிரித்தானிய ராணியாக பதவியேற்ற 70ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் ஆண்டாகும். மகாராணியாரின் ’பிளாட்டினம் ஜூபிலி’ கொண்டாடப்பட இருக்கும் நேரத்தில் ஹரியின் புத்தகம் வெளியானால், அது மகாராணியாரின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களை பாதிக்கும் என ராஜ குடும்ப உறுப்பினர்கள் கருதுகின்றார்கள்.
மகாராணியாரை அவமதிக்கும் வகையிலான ஹரியின் முடிவு மீண்டும் ராஜ குடும்ப உறுப்பினர்களை கொந்தளிக்கச் செய்துள்ள நிலையில், ஏற்கனவே அவருக்கும் குடும்பத்துக்கும் இருந்த பிளவு மேலும் அதிகரிக்கும் என்றும், இனி அவர் ராஜ குடும்பத்துடன் இணைவது கடினம் என்றும் ராஜ குடும்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவை ஆளும் ஒருவர் 70 ஆண்டுகள் பதவியில் இருக்கும் ஒரு விடயம் இதற்கு முன் நடந்தது இல்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில், 70 ஆண்டுகள் பதவி வகிக்கும் முதல் பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தான்.
இப்படி ஒரு சிறப்பை பிரித்தானியா கொண்டாட இருக்கும் நிலையில், அதைக் குலைக்கும்வகையில் ஹரியின் புத்தக வெளியீடு இருக்கும் என்பதால் ராஜ குடும்பம் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.