அரச குடும்பத்தை மதித்து நடப்பேன்: இளவரசர் ஹரி தந்தை சார்லசுக்கு எழுதிய உருக்கமான கடிதம்
காலமான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகளுக்கு வருவதற்கு முன்னர் ஹரி தமது தந்தையான இளவரசர் சார்லசுக்கு எழுதிய கடிதம் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமது தந்தையும் பட்டத்து இளவரசருமான சார்லசுக்கு ஹரி எழுதிய கடிதத்தில், மிக உருக்கமான பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளதாகவும், அரச குடும்பத்தை மதித்து நடப்பேன் என ஹரி உறுதி அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட அந்த கடிதம், தற்போதைய சூழலில் இளவரசர் சார்லசை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, விலகிய பின்னர், நீண்ட ஓராண்டுக்கு பிறகு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஹரி சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.
ஆனால், சார்லஸ் எதையும் மனம் திறந்து பேசும் சூழலில் தற்போது இல்லை என்றே கூறப்படுகிறது. ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியால் அரச குடும்பம் தம்மை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற சந்தேகத்தாலையே,
பிரித்தானியா திரும்பும் முன்னர் தமது தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதும் கட்டாயத்திற்கு இளவரசர் ஹரி தள்ளப்பட்டதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இளவரசர் ஹரி எண்ணியது போன்று, குடும்பத்தில் அமைதியான சூழல் இல்லை என்பதும், தன் மீதான கோபம் அனைவருக்கும் இருப்பதாகவும் ஹரி உணர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் ராணியாரை தேற்றுவது மட்டுமே, அனைவரது முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதில், ஹரி உடனான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்க குடும்ப உறுப்பினர்கள் எவரும் தற்போது தயாரல்ல.
மட்டுமின்றி, அனைவரையும் சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல என்பதை தற்போதைய சூழலில் இளவரசர் ஹரி புரிந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இன்னும் சிறிது நாள் தமது மகன் பிரித்தானியாவில் தங்க வேண்டும் என இளவரசர் சார்லஸ் ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் கர்ப்பிணியான மேகன் அமெரிக்காவில் ஹரியின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இளவரசர் வில்லியம் மற்றும் சார்லசுடனும், தமது சகோதரரின் மனைவி வருங்கால ராணியார் கேட் மிடில்டனுடனும் ஹரி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.