அப்பா மற்றும் அண்ணனுடன் இரண்டு மணி நேரம் பேசியபின் இளவரசர் ஹரி: எடுத்துள்ள முடிவு
தாத்தாவுடைய இறுதிச்சடங்குக்காக அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, தன் தந்தை மற்றும் அண்ணன் வில்லியமுடன் இரண்டு மணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அண்ணன் வில்லியமுடன் குறுஞ்செய்திகளை பறிமாறிக்கொண்ட இளவரசர் ஹரி, தந்தை இளவரசர் சார்லஸ் மற்றும் அண்ணன் இளவரசர் வில்லியம் ஆகியோருடன், தாத்தாவின் இறூதிச்சடங்குக்குப் பின் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமெரிக்கா திரும்பப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா திரும்பும் வசதியுடனான டிக்கெட்டையே பதிவு செய்துதான் ஹரி பிரித்தானியாவுக்கு வந்திருக்கிறார்.
நாளை மறுநாள் (ஏப்ரல் 21ஆம் திகதி) மகாராணியாரின் பிறந்தநாள் ஆகும்.. மகாராணியார், திருமணத்துக்குப் பின் முதன்முறையாக தன் கணவர் இல்லாத ஒரு பிறந்தநாளை சந்திக்க இருப்பதால், அன்று பாட்டியை சந்திப்பது அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று கருதும் ஹரி, பாட்டியாரை சந்தித்த பிறகே அமெரிக்கா திரும்புவார் என கருதப்படுகிறது.
குடும்பத்தாருடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கு ஹரிக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். மேலும், கோடையில் கென்சிங்க்டன் மாளிகையில் இளவரசி டயானாவின் சிலை ஒன்றை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் மீண்டும் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி, இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளான அன்று, இருவரும் தங்கள் தாயின் சிலையை திறந்துவைக்க சந்திக்கும் அந்த நாள், சகோதரர்களுக்கிடையே உருவான பிளவை சரி செய்ய உதவலாம் என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.