இன்னொரு இளவரசரால் பிரித்தானிய ராணியாருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி: வெடித்த சர்ச்சை
தொழிலதிபர் ஒருவரை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அறிமுகம் செய்து வைக்க பிரித்தானிய ராணியாரின் உறவினர் இளவரசர் மைக்கேல் பெருந்தொகை வசூலித்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
தென் கொரிய தொழிலதிபர்களையே ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரங்களுக்கு இளவரசர் மைக்கேல் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ரஷ்ய மொழியை சரளமாக பேசுபவர் என்பதால் இளவரசர் மைக்கேல் பிரித்தானிய ராணியாரின் உத்தியோகப்பூர்வமற்ற ரஷ்யாவுக்கான தூதர் என்றே அறியப்பட்டு வந்துள்ளார்.
மட்டுமின்றி ரஷ்ய ஜனாதிபதியை எளிதாக சந்திக்கும் நபர்களின் பட்டியலில் இளவரசர் மைக்கேலும் இடம்பெற்றிருந்துள்ளார்.
இந்த நிலையிலேயே, தொழிலதிபர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதியுடன் அல்லது அவருக்கு மிக நெருங்கிய வட்டாரத்தில் அறிமுகம் கிடைக்க 50,000 பவுண்டுகள் வரை இளவரசர் மைக்கேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ஒரு மாத காலம் குறிப்பிட்ட தொழிலதிபருக்கு ரஷ்யாவில் ஆலோசகராக பணியாற்ற 36,000 பவுண்டுகளும் கட்டணமாக வசூலித்துள்ளனர்.
மேலும், தொழிலதிபர்கள் சார்பில் ரஷ்ய மொழியில் உரையாற்ற 143,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பத்திரிகையானது, தொழிலதிபர் என்ற போர்வையில் இளவரசரை தொடர்பு கொண்டு உரை ஒன்றை தயார் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
அதை உண்மை என நம்பிய இளவரசர் மைக்கேல், கென்சிங்டன் அரண்மனையில் வைத்து ரஷ்ய மொழியில் உரையை பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.
இதை இளவரசரின் தனிப்பட்ட செயலாளரான கமிலா ரோஜர்ஸ் மின் அஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இளவரசர் மைக்கேல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இளவரசர் மைக்கேலுக்கு ஜனாதிபதி புடினுடன் எந்தவிதமான சிறப்பு உறவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.