இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு: அரண்மனைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிப்பு
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கான இறுதி கட்ட ஆயத்தங்கள் நடைபெற்று வரும் நிலையில், பக்கிங்காம் மற்றும் விண்ட்சர் மாளிகைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்
. இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான அவரது நலம் விரும்பிகள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அரண்மனைகள் முன் குவியலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், பாதுகாப்பு கருதி பக்கிங்காம் மற்றும் விண்ட்சர் மாளிகைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
மாளிகைகளைச் சுற்றி அமைந்துள்ள நதிகள் மட்டுமின்றி, மழைநீர் வடிகால்களுக்குள் கூட பொலிசார் இறங்கி பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணமுடிகிறது. லண்டனில், பக்கிங்காம் அரணமனை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுவிட்டன.
அங்கும் ஆயுதம் தாங்கிய பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் ஹெலிகொப்டர்களும் வானில் வட்டமிட்டவண்ணம் உள்ளன. மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள், ரயில்கள் காலியாக ஓடுகின்றனவாம்.
விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்கும் எட்டு நிமிட அணிவகுப்புக்குப் பின், 3 மணியளவில் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது.