சென்னையில் இளவரசர் பிலிப்: வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படம்
இந்தியா வந்திருந்த பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், சென்னைக்கு வந்திருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு அபூர்வ புகைப்படம் வெளியாகியுள்ளது. 1959ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ஆம் திகதி இந்தியா வந்துள்ளார் இளவரசர் பிலிப்.
அதுவரை வேறு யாருக்கும் இந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்ட வரவேற்பை இந்தியா கொடுத்திராத நிலையில், இளவரசர் பிலிப்பை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் கூடியிருக்கிறார்கள். அதுபோக, பனிவிழும் அதிகாலைப்பொழுதில், குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 5,000 பேர் விமான நிலையத்தில் கூடியிருந்திருக்கிறார்கள்.
இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திரா காந்தியுடன் 40 நிமிடங்களாக காத்திருக்க, விமானத்திலிருந்து இறங்கி வந்த இளவரசர் பிலிப்புக்கு மக்கள் மாலைகள் அணிவித்துள்ளார்கள். இனி மாலை போட கழுத்தில் இடமில்லை என்ற நிலை வந்தபோது, அழகான இளம்பெண் ஒருவர் மாலையணிய வர, அவரிடம், இனி என் கழுத்தில் இடமில்லை, ஆகவே, இந்த மாலையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு என் நினைவு வரட்டும் என்று வேடிக்கையாக கூறியுள்ளார் பிலிப்!
ஜனவரி 21ஆம் திகதி, இளவரசர் பிலிப், இந்திய பிரதமர் நேருவுடன் புதுடில்லியில் இருக்கும் புகைப்படம் ஒன்றைக் காணலாம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் திகதி, சென்னை வந்த இளவரசர் பிலிப்புக்கு ராஜ் பவனில் அப்போதைய கவர்னரான ஸ்ரீ விஷ்ணுராம் மேதி விருந்தொன்றை அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீமதி கமலா லக்ஷ்மண் மற்றும் அவரது சகோதரியான குமாரி ராதா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சென்னையில், கமலா லக்ஷ்மண் மற்றும் குமாரி ராதா ஆகியோரை இளவரசர் பிலிப் சந்தித்து உரையாற்றும் அந்த அபூர்வ புகைப்படத்தையும் இந்த செய்தியில் காணலாம்.