பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக... இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் ஒரு அபூர்வ நிகழ்வு
பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொருத்தவரையில், ராஜ குடும்ப உறுப்பினர்களின் இறுதிச்சடங்கு என்பது தனிப்பட்ட ஒரு நிகழ்வு.
அதைக் காண பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படாது, இதுவரை எந்த ராஜ குடும்ப உறுப்பினரின் இறுதிச்சடங்கும் மக்கள் காண நேரலையில் ஒளிபரப்பப்பட்டதில்லை.
ஆனால், பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு, மக்கள் காண நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Majesty magazine பத்திரிகையின் ஆசிரியரான Joe Little என்பவர் கூறும்போது, இது பிரித்தானிய ராஜ குடும்ப வரலாற்றிலேயே தனித்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும், முதன்முறையாக, பொதுமக்களுக்கு ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரின் இறுதிச்சடங்கை நேரலையில் காணும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று எண்ணுகிறேன்.
பொதுவாக இறுதிச்சடங்கு என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு, அதைக் காண ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்கிறார்.
ராஜ குடும்ப உறுப்பினர்களின் உடல், விண்ட்சர் மாளிகையில் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் சிற்றாலயத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, 200 ஆண்டுகால பழமை வாய்ந்த ஒரு பெட்டகத்தில் வைக்கப்படும் என்பதை பலரும் படித்து அறிந்துகொண்டிருப்பார்கள்.
ஆனால், புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பின் உடல், ஆராதனைக்குப் பின்பு, மின் மோட்டார் ஒன்றின் உதவியால், அப்படியே தரையிலிருந்து கீழிறங்கி மறைவதை மக்கள் அனைவரும் நேரலையில் பார்த்துள்ளார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இளவரசரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, தேவாலயத்தின் தரையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குவதைக் காணலாம்.
புனித ஜார்ஜ் சிற்றாலயத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அந்த 200 ஆண்டுகால பழமை வாய்ந்த பெட்டகத்தில் பாதுகாக்கப்படும் 25ஆவது உடல் இளவரசர் பிலிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.