என் தாய் இறக்கும்போது எனக்கு 14 வயது... அந்த சோகம் எனக்குத் தெரியும்: தாயை இழந்த சிறுவனைத் தேற்றும் இளவரசர் வில்லியம்
தனது 11 வயதில் தாயை இழந்த ஒரு சிறுவனை, எனக்கும் அந்த கஷ்டம் தெரியும் என்று கூறி, பிரித்தானிய இளவரசர் வில்லியம் தேற்றும் வீடியோ ஒன்று வெளியாகி நெகிழவைத்துள்ளது.
இளவரசி டயானா கார் விபத்தொன்றில் உயிரிழக்கும்போது, இளவரசர் வில்லியமுக்கு 14 வயது.
கணவரைப் பிரிந்து மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துக்கொண்டு டயானா சுற்றிய அந்த நாட்கள் ராஜ குடும்பத்தை தலைகுனிய வைத்த நாட்கள்.
தினம் தினம் தாயையும் தந்தையையும் குறித்து வெளியான செய்திகளைக் கேட்டு இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் மனது நிச்சயம் வலித்திருக்கத்தான் செய்யும். ஆனால், அதைவிட அவரது திடீர் மரணம் அவர்களை அதிகம் பாதித்தது.
டயானா இறந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், அந்த வலி தனக்கு இன்னமும் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் வில்லியம்.
Lancashireஇல் அமைந்துள்ள வறுமை, வீடின்மை, போதையால் பாதிக்கப்பட்டோர் போன்றவர்களுக்கான இல்லம் ஒன்றிற்கு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் சென்றிருந்தார்கள்.
அங்கு, 11 வயதில் தன் தாயை இழந்த ஒரு சிறுவனை சந்தித்தார்கள் அவர்கள். அந்த சிறுவனின் தாய் போதைக்கு அடிமையாகி, ஒரு கட்டத்தில் போதை அதிகமாகி உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறும்போதுதான் இளவரசர் வில்லியம் தானும் தன் தாயை தனது 14 வயதில் இழந்ததாகவும், தனக்கு அந்த கஷ்டம் புரியும் என்றும் கூறினார்.
ஆனாலும், அந்த சிறுவனைத் தேற்றும் வகையில், அந்தக் கஷ்டமும் காலப்போக்கில் சரியாகிவிடும் என்றார் அவர்.
அந்த சிறுவனை அவர் தேற்றும்போது, அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடின என்பது அவருக்குத்தான் தெரியும்...