நான் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கிய போது... டிராவிட் என்னிடம் சொன்ன வார்த்தை: ப்ரித்வி ஷா உருக்கம்
இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா ஊக்கு மருந்து பிரச்சனையில், சிக்கிய போது, டிராவிட் தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பேசியுள்ளார்.
ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி வரும் 17-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார்.
அதே போன்ற இந்த இந்திய அணியில் இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் டிராவிட் பயிற்சியின் கீழ் அண்டர் 19 இந்திய அணியில் விளையாடியவர்கள்.
இந்நிலையில், இளம் வீரரான ப்ரித்வி ஷா, கடந்த 2019-ஆம் ஆண்டு தான் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட விவகாரத்தின் போது, டிராவிட் தனக்கு ஆறுதலாக இருந்ததைப் பற்றி கூறியுள்ளார்.
அதில், நான் எட்டு மாத காலம் கிரிக்கெட் விளையாட்டில் தடை செய்யப்பட்ட போது ராகுல் டிராவிட் சார் எனக்கு போன் செய்து இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமான ஒன்று. இதில் உன் மீது எந்த தப்பும் இல்லை நீ கவலைப்படாதே. வலுவாக அணிக்கு திரும்புவாய் என தனக்கு ஆறுதல் சொன்னதாக கூறியுள்ளார்.
அவர் சொன்னது போன்றே ப்ரித்வி ஷா இப்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க ஒரு வலுவான வீரராக உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.