பழிவாங்கவே என் கணவர் மீது புகார்! கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையில் கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி, முன்னாள் மாணவி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மாணவிகள் போராட்டம்
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலர், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்கினர்.
இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பேராசிரியரின் மனைவி புகார்
இந்த நிலையில் முன்னாள் மாணவி பொய் புகார் அளித்துள்ளதாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா குற்றம்சாட்டியுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரிலேயே முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த புகாரில், தன் கணவரை மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் அனைவரது முன்னிலையிலும் பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில் மாணவியை தூண்டிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கணவர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டதால், அவரை பழிவாங்க இவ்வாறு செய்துள்ளார், இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.