பொதுமுடக்கம் மோசமானது... அதை முடிவுக்கு வந்தாகவேண்டும்: பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர்
பொதுமுடக்கம் மோசமானது, அதை முடிவுக்கு வந்தாகவேண்டும் என்று கூறும் பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவர், பிரித்தானியர்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்கிறார்.
பிரித்தானிய அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான Sir Jeremy Farrar, கொரோனா கட்டுப்பாடுகள் நாட்டின் மன நலன், கல்வி மற்றும் வேலைகளில் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
அதற்காக, இதே மன நிலைமையிலேயே நாம் தொடர முடியாது என்கிறார் அவர். அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி, இம்மாதம் (ஜூன்) மாதம் 21ஆம் திகதி பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்படும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர், என்றாலும், அடுத்த சில வாரங்கள் அதிக கவனம் செலுத்தப்படவேண்டியவை என்கிறார்.
அப்போது பிரித்தானியர்களில் வயதுவந்தவர்களில் பத்தில் எட்டு பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் அவர், தடுப்பூசிகள் வேலை செய்கின்றன என்பதை தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த கொரோனா நம்மிடையே அவ்வப்போது வந்துபோகும் ஒரு தொற்றுநோயைப்போல ஆகிவிட்டது (endemic) என்று கூறும் Sir Jeremy Farrar, இது நம்மை விட்டுப் போகப்போவதில்லை, நாம் இனி இந்த வைரஸுடனேயே வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
புதிய திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் மீண்டும் உருவாகும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டு என புதிது புதிதாக அவை தோன்றிக்கொண்டே இருக்கும், நாம்தான் அவற்றுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பொதுமுடக்கத்தை விலக்கலாம் என்று கூறும் Sir Jeremy Farrar, ஆனாலும், கட்டிடங்களுக்குள் இருக்கும்போது மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்.