நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி
பிரித்தானியாவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவிக்கு கத்திக்குத்து
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கீரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண், அவர் தங்கியிருந்த லண்டன் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் லண்டனுக்கு சென்ற கீரந்தீப் கவுர், படிப்பை முடித்து விட்டு லண்டன் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீரந்தீப் கவுர் தன்னுடைய அறையில் உறங்கி கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரி கீரந்தீப் கவுரின் உடம்பில் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிக்கிய சிசிடிவி காட்சி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இங்கிலாந்தை சேர்ந்த 44 வயது டேனியல் சீன் ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸாரின் முதற்கட்ட தகவலில், சம்பந்தப்பட்ட நபர் லண்டனில் 20 வயது இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிப்பதற்காக ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள கிரந்தீப் கவுரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
உள்ளே நுழைந்த டேனியல் தன்னை கீரந்தீப் கவுர் பொலிஸில் காட்டி கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
தற்போது குற்றவாளி டேனியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் வேதனை
தங்கள் நிலத்தை விற்று தந்தை சுக்தேவ் சிங் மற்றும் தாய் பால்ஜித் கவுர் மகள் கீரந்தீப் கவுரை லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தற்போது அவர் கொலை செய்யப்பட்ட செய்தி அவர்களை மிகப்பெரிய சோகத்தில் தள்ளியுள்ளது.
மேலும் தங்களது மகளின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |