பிரித்தானிய மகாராணியாருக்கு நெல்சன் மண்டேலா வைத்த பெயர்: சார்லஸ் வெளியிட்ட நகைச்சுவை தகவல்
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா பிரித்தானிய மகாராணியார் குறித்துக் கூறிய ஒரு விடயத்தை மன்னர் சார்லஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு வரவேற்பளித்த மன்னர்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக இருக்கும் Cyril Ramaphosaவுக்கு நேற்று பக்கிங்காம் மாளிகையில் வரவேற்பளித்தார்.
Image: PA
மகாராணியார் குறித்து மன்னர் தெரிவித்த சுவாரஸ்ய தகவல்
வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், தனது தாயாகிய மகாராணியாருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உறவு குறித்து விவரித்தார்.
அப்போது, நெல்சன் மண்டேலா தன் தாய் குறித்துக் கூறிய ஒரு விடயத்தை அவர் பகிர்ந்துகொள்ள, பார்வையாளர்களில் கூடியிருந்த இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் உட்பட 163 பேரும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிப்பொலி எழுப்ப, அவர்கள் இருந்த அறையே சிரிப்பலையில் மூழ்கியது.
அதாவது, 1997ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணியார் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தாராம். அப்போது சார்லசும் அவருடன் சென்றிருக்கிறார்.
அப்போது, நான் மகாராணியாருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன் என்று சார்லசிடம் கூறினாராம் மண்டேலா. Motlalepula என்ற அந்த பெயரின் பொருள் ’மழையுடன் வருபவர்’ என்பதாம்.
Image: POOL/AFP via Getty Images
இதில் என்ன சிரிப்பு என்றால், பொதுவாகவே, பிரித்தானியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் எங்கு சென்றாலும் தங்கள் வானிலையுடன் பயணிப்பவர்கள் என்று கூறுவார்களாம்.
அதற்குப் பொருள் என்னவென்றால், பிரித்தானியர்கள் எங்கு சென்றாலும் வானிலை குறித்து பேசுவார்களாம். இன்றைக்கு வானிலை நன்றாக இருக்கிறது அல்லவா? அல்லது, கடும் குளிராக இருக்கிறது அல்லவா என்று சொல்லி, தெரியாதவர்களுடன் கூட உரையாடலைத் துவக்குவார்களாம்.
ஆகவேதான், மண்டேலா மகாராணியாரைக் குறித்து மழையுடன் வருபவர் என கூறியபோது அனைவரும் கொல்லென சிரித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு, தான் மகாராணியாருக்கு அந்த பெயரை வைக்கக் காரணம், அவர் மீதுள்ள தனிப்பட்ட அன்புதான், பிரித்தானியர்களைக் கேலி செய்யும் பொருளில் அதைக் கூறவில்லை என மண்டேலா தரப்பில் சார்லசுக்கு விளக்கமளிக்கப்பட்டதாம்.
Image: PA