கணவரை இழந்த மகாராணியாருக்கு ஆறுதல் கடிதம் எழுதிய 5 வயது சிறுமிக்கு கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி
பிரித்தானிய மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்புடைய மரணம் குறித்து தன் பெற்றோரிடம் கேட்டு அறிந்துகொண்ட 5 வயது சிறுமி ஒருத்தி, மகாராணியாருக்கு ஆறுதல் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறாள்.
பிரித்தானியாவில், Scunthorpe என்ற இடத்தில் வாழும் Erin Bywater என்ற சிறுமி, பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப் இறந்தது தெரியவந்ததும், மகாராணியாருக்கு தன் கைப்பட ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறாள்.
5 வயது சிறுமிக்கே உரிய நடையில், அன்புள்ள மகாராணியார் அவர்களுக்கு, உங்கள் தொப்பிகளும் உடைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று துவங்கி, நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என் கடிதம் உங்களுக்கு ஆறுதலளிக்கும் என்று நம்புகிறேன் என்று எழுதி, தன் கைப்பட மகாராணியாரின் படம் ஒன்றையும் வரைந்திருந்தாள் Erin. ஆனால், அடுத்து நடந்தது அவள் மட்டுமல்ல, அவளது பெற்றோரும் எதிர்பாராதது. ஆம், அடுத்த நாளே அரண்மனையிலிருந்து ஒரு கடிதம் வந்தது Erin பெயருக்கு.
அதில், என் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, நீங்கள் அனுப்பிய ஆறுதலான வார்த்தைகளுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு எலிசபெத். R, என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு, வானத்துக்கும் பூமிக்கும் நடுவில் குதித்துக்கொண்டிருக்கிறாள் Erin. மகாராணியார் தனக்கு அனுப்பிய கடிதத்தை, தன் பள்ளித்தோழர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் காட்ட துடித்துக்கொண்டிருக்கிறாள் அவள்.
Erinஉடைய பெற்றோரோ, மகாராணியார் எவ்வளவு பிஸியாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், அப்படியிருந்தும், ஒரு குழந்தையின் கடிதத்தை மதித்து அவளுக்கு பதில் அனுப்பியதை நம்பவே முடியவில்லை என்று கூறி ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.