ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம்
பின்னால் இருந்து 7வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது
காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், அதிக முக்கியத்துவம்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் 14வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காணப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவாதத்திற்கு தற்போது உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த ராணியாருக்கான இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில், பின்னால் இருந்து 7வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சுமார் 2,000 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படும் மூன்று மணி நேரம் முன்னரே சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தமது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் நுழைய, எஞ்சிய நாடுகளின் தலைவர்கள் பேருந்துகளில் வந்து சேர்ந்துள்ளனர்.
@AP
இந்த நிலையில், போலந்து ஜனாதிபதி Andrzej Duda இருக்கையின் பின்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இறுதிச் சடங்கு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை கணக்கிடப்பட்ட அரசியல் முடிவு அல்ல, மாறாக ராஜகுடும்ப நெறிமுறையால் தீர்மானிக்கப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், ராணியாரின் இறுதிச் சடங்கில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
@reuters
இதன் காரணமாகவும் இருக்கலாம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் பின்னால் அமெரிக்க ஜனாதிபதிக்கான இருக்கை ஒதுக்கப்பட்டது என கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியின் பின்னால் 6 வது வரிசையில் ஜோ பைடன் அமர்ந்திருந்தார், அதுவும் ஐரோப்பிய ராஜகுடும்பங்கள் மற்றும் ஜோர்டான் மன்னருக்கும் பின்னால்.
இதனாலையே, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாட்டுக்கு இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
@getty