விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவர்: பாதுகாப்பு அச்சுறுத்தலில் பிரித்தானிய ராணியார்
பிரித்தானிய ராணியாரின் விண்ட்சர் கோட்டை வளாகத்தில் இருவர் அத்துமீறி நுழைந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்ட்சர் கோட்டை வளாகத்தில் ராணியார் நடைப்பயிற்சி அல்லது குதிரை சவாரி மேற்கொள்ளும் இடத்திலேயே இருவர் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளனர்.
ஏப்ரல் 25ம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 31 வயது நபர் மற்றும் அவரது 29 வயது காதலி ஆகிய இருவரும் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகேயும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒருவர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூ இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் பாதுகாவலர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ இல்லத்தில் இருந்ததாகவும், ஆனால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது கைதாகியுள்ள காதலர்கள் இருவரும் பொலிசாரின் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பெண் ஒருவர் அத்துமீறி நுழந்த போதே அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது சம்பவம் நடந்துள்ள நிலையில், கண்டிப்பாக நடவடிக்கைகள் இருக்கும் எனவும் இது மன்னிக்க முடியாதது எனவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.