இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் ரசிகர்களுக்கு பிடித்த ராகுல் டிராவிட்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி விலகியதில் இருந்து தற்போது வரை ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றிய போதும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ திவீரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு ராகுல் டிராவிட் முதலில் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவரது பதவிக்காலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதாவது 2023 வரை தலைமை பயிற்சியாளராக இருப்பார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட டிராவிட்டுக்கு ரூ 10 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்து, சிறப்பாக செயல்பட்டார்.
டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.