ராஜிவ்காந்தி கொலை வழக்கு: சிறைச்சாலைக்குள் சம்பாதித்த பணத்தில் ரவிச்சந்திரன் செய்த நற்செயல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவிச்சந்திரன் சிறைச்சாலைக்குள் சம்பாதித்த பணத்தில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன், சிறையில் வேலை புரிந்ததற்காக வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூ.5 ஆயிரத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவியாக வழங்கினார்.
இதனை ரவிச்சந்திரன் வழக்கறிஞர் திருமருகன் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.
ரவிச்சந்திரன், கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.5 ஆயிரத்தை வழங்கினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.