சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது! அவர் எங்கு தங்கவுள்ளார்?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கு தங்கவுள்ளார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் நளினி.
இவரை பரோலில் விடக்கோரி அவரது தாய் பத்மா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் பத்மாவின் மனுக்கள் அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஏற்கனவே நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது.
தற்போது மனுதாரர் பத்மாவின் மனுவை அரசு பரிசீலித்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே ஒருமாத பரோலில் வெளியே வரும் நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தங்க உள்ள வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, பொலிஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் அளிக்கும் அறிக்கையின் பேரில் நளினி பிரம்மபுரத்தில் தங்க அனுமதி வழங்கப்படும் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.