மீனவப் பெண் கூட்டு வன்புணர்வு செய்து எரித்த சம்பவம்.. இருவர் கைது!
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கூட்டு வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி, ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் கூட்டு வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மீனவப் பெண் கொலை குறித்து அறிந்த அவரது உறவினர்கள், வடகாடு கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பலமணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், குறித்த பெண்ணை ஒரிசாவை சேர்ந்த ரஞ்சன் ராணா(30), பிரகாஷ் (22) ஆகியோர் வன்புணர்வு செய்து அப்பெண்ணின் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். ஆனால், திருமாங்கல்யம் நகையை எந்த நகைக்கடையில் வாங்காததால், அதனை துணியில் சுற்றி இறால் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் கொலை மற்றும் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏனைய 4 பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தனர். எனினும் பொலிஸார் அவர்களிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.