ரத்தன் டாடா உயிலில் உள்ள நிபந்தனை - ரூ.3,800 கோடி சொத்து யாருக்கு?
பிரபல தொழிலதிபரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் திகதி காலமானார்.
ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்ததால், அவரது சொத்து யாருக்கு செல்லும் என கேள்வி எழுந்தது.
ரத்தன் டாடா உயில்
இந்நிலையில், ரத்தன் டாடாவின் உயிலில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. ரத்தன் டாட்டாவிற்கு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட ரூ.3,800 கோடி சொத்து உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
ரத்தன் டாடாவின் உயிலில், அவரது சகோதரரான ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய்(Shireen Jejeebhoy) மற்றும் டீனா ஜீஜீபாய் (Deanna Jejeebhoy), நம்பிக்கைக்குரியவரான மோகினி எம் தத்தா உள்ளிட்ட 24 பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,684 கோடி மதிப்புள்ள 3,368 பங்குகள் ரத்தன் டாடா வசம் இருந்தது. இதன் 70% பங்குகள் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கும் (RTEF) மீதமுள்ள பங்குகள் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்டிற்கும் (RTET) செல்லும்.
இந்தப் பங்குகளை, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரருக்குத் தவிர, வேறு எவருக்கும் விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்று உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகோதரர், ஒன்று விட்ட சகோதரிகளுக்கு பங்கு
மும்பையின் ஜூஹுவில் உள்ள ₹16 கோடி மதிப்புள்ள பங்களா மற்றும் அவரது நகைகள், சகோதரர் ஜிம்மி டாட்டாவிற்கு(Jimmy tata) செல்லும்.
பங்கு மற்றும் வீடுகள் தவிர்த்து மீதமுள்ள ரூ.800 கோடி மதிப்புள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மோகினி மோகன் தத்தாவிற்கு(mohini m dutta) வழங்கப்பட வேண்டும்.
மற்ற இரு பங்குகள் அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜீஜீபாய்க்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், "மூவரில் யாராவது கார், ஓவியம் போன்ற மற்ற சொத்துக்களில் ஏதேனும் ஒன்றை கையகப்படுத்த விரும்பினால், அதன் மதிப்பு மூன்று மதிப்புகளால் தீர்மானிக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு, அந்த மதிப்பு முறையே ஒவ்வொருவரின் மூன்றில் ஒரு பங்கின் ஒரு பகுதியாக இருக்கும்" என்று உயில் கூறுகிறது.
இதில் ரூ.12 கோடி மதிப்புள்ள 11 கார்கள், 65 கைக்கடிகாரங்கள், 21 கடிகாரங்கள் மற்றும் 52 பேனாக்கள் ஆகியவை அடங்கும்.
செல்லபிராணிகளுக்காக ரூ.12 லட்சம்
அவரது நெருங்கிய நன்பரான மெஹ்லி மிஸ்திரி, அலிபாக் சொத்தையும், 25 போர் பிஸ்டல் உள்பட டாடாவின் 3 துப்பாக்கிகளையும் பெறுவார்.
தனது செல்லபிராணிகளுக்காக ரூ.12 லட்சம் ஒதுக்கி உள்ளார். அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.30,000 வழங்கப்படும்.
தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேக் மாலைட்டுக்கு வழங்கிய வட்டியில்லா கல்வி கடனையும், தனது உதவியாளர் சாந்தனு நாயுடுவிற்கு வழங்கிய மாணவர் கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்.
நிபந்தனை
இந்த உயிலை நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்காக ரத்தன் டாடாவின் இரண்டு ஒன்று விட்ட சகோதரிகள், மிஸ்திரி மற்றும் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் டேரியஸ் கம்பாட்டா ஆகியோருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும்.
இந்த உயிலை எதிர்த்து யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால், இந்த உயிலின் கீழ் அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்ப பெறப்படும். எந்த சொத்தில் எந்த உரிமைகளும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த உயிலில் ரத்தன் டாடா 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார். இந்த உயிலை நிறைவேற்றுபவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |