அடுத்த கேப்டனுக்கு சரியான தலைவலி இருக்கு! கோலி ராஜினாமா குறித்து அஸ்வின் அதிரடி கருத்து
டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகிய நிலையில் தமிழக வீரர் அஸ்வின் அது தொடர்பில் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணிக் கேப்டன் விராட் கோலி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கங்குலி, ரோஹித் ஷர்மா, ரவி சாஸ்திரி போன்றவர்கள் கோலியின் சிறப்பான பணிக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வினும் கோலியின் ஓய்வு முடிவு குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், கேப்டன் எப்படி அணியை வழிநடத்தினார், என்னென்ன சாதனைகளை செய்து காண்பித்தார் என்பதுதான் மிகவும் முக்கியம். அதுதான் அவரைப்பற்றி பேச வைக்கும். ஆனால், கோலியை அதையெல்லாம் தாண்டி, கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நீங்கள் பெற்றுக்கொடுத்த வெற்றியைப் பற்றி இனிவருவோர் பேசுவார்கள்.
வெற்றி என்பது சாதாரணமாக, போட்டியின் முடிவுகளாக இருக்கலாம். ஆனால், அறுவடைக்கு முன், விதைகளை சீராக, முறையாக எப்போதுமே விதைக்க வேண்டும். அந்த விதைகளை நீங்கள் நிர்வகித்தது, விதைத்தது ஒரு தரத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள், இதே எதிர்பார்ப்பு அடுத்துவருபவர்களிடமும் இருக்கும் எனக் கூறினார்.
மேலும், உங்களுக்கு அடுத்து, கேப்டனாக வருவோருக்கு உங்கள் சாதனைகளால், பெரிய தலைவலியை நீங்கள் விட்டுச் சென்றுவிட்டீர்கள் கோலி என தெரிவித்துள்ளார்.