குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
சென்னையில் உள்ள ஆர்பிஐ (RBI)அலுவலகத்தில் நடந்த 73வது குடியரசு தின விழாவில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாத காரணத்தினால் அங்கு சில மணி நேரம் சலசலப்பும்,வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார்.
பின்பு விழாவின் நிறைவுப் பகுதியாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் தாய் வாழ்த்து பாடும்போது அங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பின்னர் நிகழ்ச்சி முடிந்தபிறகு அங்குள்ள ஒரு சிலர் என்ன காரணத்திற்காக தமிழ்த்தய் வாழ்த்து பாடும் போது அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்று காட்டமாக கேள்விகளை எழுப்பினர்.
அங்கிருந்தவர்கள் எழுப்பிய கேள்விக்கு மிகவும் அலட்சியத்துடன் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் (Madras High court) தெரிவித்துள்ளது என்று அவர்கள் கூறிய காரணத்தினால் சிறிது நேரம் அங்கு வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு இனி இதுபோன்று எந்தவொரு பிரச்சனையும் நடக்காது என்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்றும் நம்பிக்கை அளித்தனர்.
இதற்குப் பின்னரே அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.இதன் காரணமாக அங்கு சில மணிநேரம் பதட்டம் நிலவியது.