ஒரு நிமிட சபலம்... வாழ்வையே தொலைக்க இருந்த பிரித்தானியர்: திரில்லர் திரைப்படங்களையே மிஞ்சிய ஒரு உண்மை சம்பவம்
புகழ்பெற்ற சட்டத்தரணி ஒருவர், வாழ்வையே தொலைக்கும் ஒரு நிலை வரும் என்பதை உணராமல், இளம்பெண் ஒருவரிடம் சபலப்பட்ட, திரில்லர் திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ள ஒரு உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. Birminghamஐச் சேர்ந்த சட்டத்தரணியான இக்பால் முகமதுவின் (Iqbal Mohammed 38) ஆலோசனைகளுக்காக மக்கள் காத்திருப்பார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இக்பாலுக்கு, அனிசா அஹமது (Anisah Ahmed 33) என்ற பெண்ணிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அது எழுதப்பட்டிருந்த விதம் எரிச்சலையூட்ட அந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்காமல் விட்டிருக்கிறார் இக்பால். மூன்று வருடங்களுக்குப் பிறகு அதே பெண்ணிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வர, இம்முறை அது கொஞ்சம் கவர்ச்சியாக, வசீகரிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் வரவே, தான் படுகுழியில் விழப்போகிறோம் என்பது தெரியாமல், அந்த பெண்ணின் அழைப்புக்கிணங்க அவருடன் காபி ஷாப் ஒன்றிற்கு சென்றிருக்கிறார் இக்பால்.
அவரிடம் மயங்கிய இக்பால், தனக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட விடயத்தை மறைத்திருக்கிறார். அனிசாவுடனான இந்த உறவு ஒன்பது மாதங்கள் நீடித்திருகிறது.
அப்போது சமூக ஊடகம் ஒன்றின் மூலம் இக்பாலுக்கு திருமணமான செய்தியை அறிந்துகொண்ட அனிசா ஆத்திரமடைந்துள்ளார். இனி தன்னால் அவருடன் பழக முடியாது,இனி இந்த உறவைத் தொடர விருப்பமில்லை என்று இக்பால் கூறிவிட, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரியைப்போல இக்பாலை பழிவாங்க முடிவு செய்திருக்கிறார் அனிசா.
இக்பாலின் மனைவி, குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள் என அனைவருக்கும் தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிவிட்டதாக செய்திகள் அனுப்பிய அனிசா, இக்பாலின் பெயரில் தன் முன்னாள் காதலர் ஒருவரை ஒரு மொபைல் வாங்கச் சொல்லி, அதிலிருந்து தனக்கு இக்பால் மிரட்டல் செய்திகள் அனுப்புவதுபோலவும், அவரது பெயரில் போலியாக மின்னஞ்சல் கணக்கு துவக்கி, தன்னை அவர் துன்புறுத்துவதாகவும், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் ஒரு பெரிய சதிவலையே பின்னியிருக்கிறார்.
இது எதையுமே நிரூபிக்க முடியாததால், இக்பால் தன்னை வன்புணர்ந்ததாக புகார் தெரிவிக்க, தனது சட்டத்தரணி அலுவலகத்திலேயே கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் இக்பால்.
இதே விடயத்தை மையமாகக் கொண்டு ஒரு ஆங்கிலத் திரைப்படமும் உள்ளது. எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், தன் முன்னாள் காதலரிடம் தன்னைக் கத்தியால் குத்துமாறு கூற, அவர் அனிசா உயிரிழந்துவிடுவாரோ என அஞ்சி மறுக்க, தன்னைத்தான் தொடையில் கத்தியால் குத்திக்கொண்டு, இக்பால் தன்னைக் குத்தி விட்டதாக நாடகமாட, உண்மை வெளிவந்துவிட்டது.
அனிசாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, குறைந்தது நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியாது. அவருக்கு உதவிய அவரது முன்னாள் காதலருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், இக்பாலும் அவரது மனைவியும் பிரிய, புகழ் பெற்று விழங்கிய சட்டத்தரணி வேலைக்கும் பிரச்சினை, திருமண வாழ்க்கையிலும் பிரச்சினை என வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது இக்பாலுக்கு. என்றாலும், தங்கள் வாழ்வில் ஒரு பெண் விளையாடுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, கணவனை மன்னித்து அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்துள்ளார் இக்பாலின் மனைவி.
தன் வழ்நாளுக்கும் தான் தன் மனைவியின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக
கூறுகிறார் இக்பால்.
இதற்கிடையில், இப்போதும், அனிசா சிறையிலிருந்து திரும்பிவந்தால் என்ன செய்வாரோ
என்ற அச்சம் தனக்கு இருப்பதாக கூறும் இக்பால், எக்காரணம் கொண்டும்
சபலப்படாதீர்கள் என்கிறார்!