பொருளாதார மந்தநிலையில் பிரித்தானியா: எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்
பிரித்தானியா ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடையும் என தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் சரிவடையும்
பிரித்தானியர்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு பணவீக்கமானது 9.1% என இருக்கும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், 2023ல் 7.4% என சரிவடையும் என்றார்.
@Skynews
நமது தொடர் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த ஆண்டு மத்தியில் பணவீக்கம் சரிவடையும் எனவும் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரக் கொந்தளிப்பை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸின் மினி-பட்ஜெட்டுக்கு எட்டு வாரங்களுக்குப் பிறகு நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பில் தங்களது அரசாங்கம் தொடர்ந்து போராடும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், வரியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், செலவீனங்களை குறைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
எரிசக்தி கட்டணங்கள்
மேலும், ஏப்ரல் முதல் ஆண்டுக்கு சராசரியாக 500 பவுண்டுகள் முதல் 3,000 பவுண்டுகள் வரை எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கும். 2021ஐ ஒப்பிடுகையில் இது 2,000 பவுண்டுகள் அதிகமாகும்.
@PA
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கவுன்சில் வரியை 4.99% வரை அதிகரிக்க அனுமதிக்கப்படும். தற்போது வாக்கெடுப்பு இல்லாமல் இதை 2.99%க்கு மேல் அதிகரிக்க முடியாது. மேலும் ஊதிய அதிகரிக்கும் அதே வேளை வரியும் அதிகமாக செலுத்த நேரிடும்.