பிரித்தானிய எல்லைக்குள் புலம்பெயர்வோரை கொண்டு விட்டு சென்ற பிரான்ஸ் போர்க்கப்பல்... செய்தியாளர்கள் கண் முன் நடந்த அராஜகம்
பிரித்தானிய கடல் எல்லைக்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்கள் புலம்பெயர்வோரை விட்டுச் செல்லும் நிகழ்வுகள் தொடர்கின்றன. பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலின் கடும் முயற்சியையும் மீறி, புலம்பெயர்வோர் ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நேற்று ஒரு நாளில் மட்டும், குறைந்தது 430 புலம்பெயர்வோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியா வந்தடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், இன்று காலையில், பிரித்தானிய செய்தியாளர்கள் கண் முன்னாலேயே, பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் ஒன்று, ரப்பர் படகு ஒன்றில் வந்த 13 புலம்பெயர்வோரை பிரித்தானிய கடல் எல்லைக்குள் கொண்டு விட்டுச் சென்றுள்ளது.
வெறும் ஆறு பேர் மட்டுமே பயணிக்க வசதியுள்ள அந்த சிறிய ரப்பர் படகில், 13 பேர் ஆபத்தான வகையில் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார்கள். செய்தியாளர்களின் படகைக் கண்டதும், அவர்கள் இனி இந்த புலம்பெயர்வோரை கவனித்துக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர்களை விட்டுவிட்டு அந்த பிரான்ஸ் போர்க்கப்பல் பிரான்ஸ் எல்லைக்கே திரும்பிச் சென்றுள்ளது.
பிரபல பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான Good Morning Britain நிகழ்ச்சியின் ஊடகவியலாளரான Pip Tomson முதலானோர் இந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
என்ன செய்வது என்று யோசித்து, பிறகு பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படைக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க, நாங்கள் பிஸியாக, இருக்கிறோம், ஏற்கனவே எல்லை கடப்பவர்களை கையாண்டு கொண்டிருக்கிறோம், கொஞ்சம் நேரம் அவர்களை கண்காணித்துக்கொள்ளுங்கள் என எல்லை பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொள்ள, அதன்படி அவர்கள் வரும் வரை, சுமார் 20 நிமிடங்கள் ஊடகவியலாளர்கள் அந்த புலம்பெயர்வோரை கண்காணித்துக்கொண்டிருந்த அசாதாரண சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. பின்னர் வந்த பாதுகாப்பு படையினர், அந்த புலம்பெயர்வோரை அழைத்துச் சென்றுள்ளார்கள்.