டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்த நெகிழ்ச்சி தருணம்
இந்தியா முழுவதும் இன்று 73 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்பு வீர தீர செயல் புரிந்தவர்களுக்காக அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கம் பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக வெகு சீக்கிரமாகவே 30 நிமிடங்களில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மணிநேரம் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இது ஒருபுறமிருக்க தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் பங்குபெறும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள், வ. உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோர் இடம்பெற்றிருந்த அலங்கார ஊர்திகள் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கு பெற்றிருந்தன.
இவை தவிர பெரியார், ராஜாஜி, காமராஜர், முத்தாராமலிங்கத் தேவர் போன்றோரின் சிலைகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.