படுக்கையறை சுவற்றில் ரத்தக்கறை... கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக யுவதி
இந்திய மாநிலம் கேரளாவில் புகுந்த வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் தொடர்பில் உறவினர்கள் காவல்துறை தலைவரை நாடியுள்ளனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில் குடியிருக்கும் தேவிகா என்பவரே கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புகுந்த வீட்டில் ஏற்பட்ட கடும் உளவியல் துன்புறுத்தலுக்கு இலக்கானதாலையே அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தேவிகாவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அர்ஜுன் தேவிகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அர்ஜுனின் சகோதரர் ஒருவரின் திருமணத்திற்கு பின்னர் வீட்டில் தொடர்ந்து வாக்குவாதமும் பிரச்சனையும் ஏற்பட்டு வந்துள்ளதாக தேவிகா குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவிகா திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடியிருப்பில் நாற்காலி ஒன்று உடைந்த நிலையிலும், படுக்கையறை சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்ததையும் முதற்கட்ட விசாரணையில் பொலிசார் கண்டறிந்திருந்தனர்.
ஆனால் தேவிகாவின் உடலில் எந்த காயங்களும் கண்டறியப்படவில்லை. மட்டுமின்றி, இதே நிலை நீடித்தால் தாம் தற்கொலை செய்து கொள்வதாக பலமுறை தேவிகா கூறியிருந்ததாகவும் அர்ஜுன் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்றும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தம்முடன் மொபைலில் பேசும் போது அவர் தெரிவித்ததாகவும், இதனால் வீட்டுக்கு திரும்பிய பின்னர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் நாற்காலி ஒன்றை தூக்கி வீசி உடைத்ததாகவும் அர்ஜுன் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேவிகா நள்ளிரவு 1.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தேவிகாவின் உறவினர்களுக்கு அதிகாலை 3.30 மணி கடந்த பின்னரே தகவல் தெரிய வந்ததாகவும், அதுவும் அர்ஜுன் குடும்பத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் தேவிகாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், அவசர அவசரமாக இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவிகாவின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், யுவதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட காவல்துறை தலைவருக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கும் தேவிகாவின் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.