உணவின் சுவையா, தரமா எது முக்கியம்? ஆய்வில் கனேடியர்கள் அளித்த எதிர்பாராத பதில்
கனேடியர்களில் 3,000 பேரிடம், உணவின் சுவையா, தரமா அல்லது எந்த உணவு சத்துள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா என ஆய்வொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
உணவின் சுவையா, தரமா எது முக்கியம்?
உணவு ஃப்ரெஷாக உள்ளதா, காலாவதி ஆக இன்னும் பல நாட்கள் உள்ளனவா என்றெல்லாம் பார்த்து வாங்கும் சில நாட்டவர்களில் கனேடியர்களும் அடங்குவர்.

ஆனால், கோவிட் காலகட்டம், உக்ரைன் போர், ஈரான் போர் போன்ற விடயங்கள், கனேடியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கும் கனேடியர்கள், எந்த உணவுப்பொருள் விலை குறைவாக கிடைக்கும் என பார்த்து வாங்கத் துவங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
ஆய்வு முடிவுகள்
கனேடியர்களில் 3,000 பேரிடம், உணவின் சுவையா, தரமா எது முக்கியம், அல்லது, எந்த உணவு சத்துள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா என ஆய்வொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, சுவை, சத்து ஆகிய விடயங்களைவிட, தங்களால் ஒரு உணவுப்பொருளை வாங்க இயலுமா என்பதற்குத்தான் தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு கூட்டத்தினர் தெரிவித்தார்கள்.
அதாவது, உணவுப்பொருட்களின் விலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் விலை குறைவாக கிடைக்கிறதா என பார்த்து கனேடியர்கள் உணவுப்பொருட்களை வாங்கத்துவங்கியுள்ளார்கள் என்பது அந்த ஆய்வின் முடிவுகளிலிருந்து தெரியவந்தது.
Dalhousie பல்கலையின் Agri-Food Analytics Lab என்னும் ஆய்வமைப்பு நேற்று வெளியிட்ட அந்த ஆய்வின் முடிவுகளில், 45.5 சதவிகித மக்கள், உணவுப்பொருட்கள் வாங்கச் செல்லும்போது உணவின் சுவை, ஊட்டச்சத்து ஆகிய விடயங்களைவிட அதன் விலையைத்தான் முதலில் கருத்தில் கொள்வது தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் உணவுப்பொருட்கள் விலைதான் மிகவும் அதிகரித்துள்ளது என்று 81 சதவிகித மக்கள் கூறியுள்ள நிலையில், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, சராசரி கனேடியர் ஒருவர் உணவுப்பொருட்களுக்காக மாதம் ஒன்றிற்கு சுமார் 23 டொலர்கள் கூடுதல் செலவிடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வில் தெரியவந்துள்ள இன்னொரு கொடுமையான விடயம் என்னவென்றால், 34 சதவிகித கனேடியர்கள், உணவுக்காக தங்கள் சேமிப்புகளில் கைவைப்பது மற்றும் கடன் வாங்குவது ஆகிய விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |