வௌவால்களில் கொரோனா வைரஸ்... பிரித்தானியாவில் முதன்முறையாக கண்டுபிடிப்பு: அச்சுறுத்தும் விடயமா?
பிரித்தானியாவில் முதன்முறையாக வௌவால்களில் ஒருவகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குதிரைலாட வௌவால்கள் (horseshoe bats) என்று அழைக்கப்படும் வௌவால்களில் இந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலகம் முழுவதும் பரவும் Covid-19 என்னும் தொற்றை பரப்பும் கொரோனா வைரஸ் அல்ல.
ஆனால், அதனுடன் தொடர்புடைய ஒரு வைரஸ்தான். East Anglia பல்கலைக்கழகம், Zoological Society of London (ZSL) மற்றும் இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது அச்சுறுத்தும் விடயமா என்றால், இந்த வகை வைரஸ் இதுவரை மனிதர்களுக்கு பரவியதற்கான ஆதாரமோ, எதிர்காலத்தில் அது பரவும் என்பதற்கான ஆதாரமோ இல்லை.
ஆனால், இந்த வைரஸ் திடீர் மாற்றம் பெற்றால் அது மனிதர்களுக்கு நோய் உருவாக்கும் வைரஸாக மாறலாம்! ஆய்வாளர்கள், Somerset, Gloucestershire மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களிலிருந்து, 50க்கும் மேற்பட்ட குதிரைலாட வௌவால்களின் எச்சங்களை சேகரித்து ஆய்வு செய்ததில், அவற்றில் இந்த கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
Covid-19 நோய் உடைய மனிதர் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் இந்த வௌவாலுக்கு பரவுமானால், அந்த வௌவாலின் உடலில் உள்ள கொரோனா வைரஸ் திடீர்மாற்றம் பெற வாய்ப்புள்ளது.
ஆகவே, இந்த வௌவால்கள் அல்லது அவற்றின் எச்சத்தை யாராவது தொட வேண்டிய சூழல் ஏற்பட்டால், முறையான பாதுகாப்பு உடை அணிந்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.