இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு
இங்கிலாந்துக்கு செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஜூன் 18 முதல் 22ம் திகதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க இருக்கிறது.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்ததும், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்காமில் முதல் டெஸ்ட் போட்டியும் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் திகதி முதல் 16ம் திகதி வரை 2-வது டெஸ்ட் போட்டியும்,
லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 25-ல் இருந்து 29 வரை 3-வது டெஸ்ட் போட்டியும் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 முதல் 6 வரை 4-வது டெஸ்ட் போட்டியும், செப்டம்பர். 10 முதல் 14 வரை 5-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.
இந்த இரு தொடர்களுக்கான அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் அதிகரிப்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும், மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.