வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்: அரசாங்கம் புதிய திட்டம்
இந்திய அரசு, மேம்படுத்தப்பட்ட தங்கப் பணமாக்கல் திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, இவ்விவகாரம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1,000 டன்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் 1,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் திரட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களைப் பொறுத்தவரை பாரம்பரியமாக தங்கத்தை வாங்கி பராமரித்து வரும் பழக்கம் கொண்டவர்கள். தலைமுறை தலைமுறையாக இந்தியக் குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கம் கைமாறி கொண்டே வருகிறது.
இந்திய குடும்பங்களிடம் சுமார் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இதற்காகவே Gold Monetization scheme என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
தங்கத்தை பணமாக்கும் திட்டம் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இந்த திட்டத்தின் கீழ் நாம் செலுத்தி வட்டி வருமானம் பெறலாம். இந்த திட்டத்தில் 2.5 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கும்.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள நகைக்கடைக்காரர்கள் மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சேகரிப்புப் பங்காளிகளாக (collection partners) இணைக்கப்படலாம்; இதன் மூலம் அவர்கள் வீடுகளில் உள்ள தங்க வைப்புகளைத் திரட்ட முடியும்.
90 பில்லியன் டொலர்
முன்னர் இந்தத் திட்டத்தில், வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில், உள்நாட்டுத் தேவையையோ அல்லது இத்துறையைச் சார்ந்த வாழ்வாதாரங்களையோ பாதிக்காத வகையில், தங்க இறக்குமதியைக் குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியான தீர்வுகளை நாடும் அதே வேளையில், இத்திட்டத்தை மறுசீரமைக்குமாறு இந்தியாவின் பொற்கொல்லர் மற்றும் நகை வணிக அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

இந்தியக் குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் ஐந்து சதவீதத்தைக்கூட பணமாக்கினால், அது 90 பில்லியன் டொலர் வரையிலான பணப்புழக்கத்தை உருவாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Gold Monetization scheme என்ற திட்டம் 2015ல் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, 2025 மார்ச் மாதத்திற்குள் வெறும் 38 டன்கள் மட்டுமே பணமாக்கப்பட்டுள்ளன; இந்தியாவின் மதிப்பிடப்பட்ட 25,000 டன் தங்க இருப்போடு ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |