6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்
சிங்கப்பூரில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் ரகசிய அறையில், பணக்காரர்கள் ரூ.12,500 கோடி மதிப்புள்ள செல்வத்தையும் தங்கத்தையும் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கின் ஜெனீவா
பொதுவாக உலகின் பெரும் பணக்காரர்கள் தங்கள் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்றப் பொருட்களை சேமிக்க சுவிஸ் வங்கிகளை நாடுவது வழக்கம். ஆனால் தற்போது சிங்கப்பூர் அந்த வகையில் கவனம் ஈர்த்து வருகிறது.
பெரும் பணக்காரர்களால் சிங்கப்பூர் தற்போது கிழக்கின் ஜெனீவா என்று அழைக்கப்படுகிறது. பெரும் பணக்காரர்கள் நாடும் அந்த ரகசிய அறை சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது.
இங்கேயே தங்கள் தங்கம் மற்றும் வெள்ளியை பெரும் பணக்காரர்கள் சேமித்து வைத்துள்ளனர். இந்தக் கட்டிடத்தை கிரிகர் கிரிகர்சன் என்பவர் நிறுவியுள்ளார். இந்தக் கட்டிடத்தில் ஒரு பெரிய அறை அமைந்துள்ளது.
இங்கே தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை சேமித்து வைப்பதற்கான ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் லாக்கர்கள் உள்ளன. 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இங்கே தங்கள் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களை சேமிக்க பணக்காரர்களிடம் இருந்து வந்த ஆர்டர்களில் 88% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் மீதான நம்பிக்கை
சமீப காலமாக சிங்கப்பூர் சுவிட்சர்லாந்துடன் ஒப்பிடப்படுகிறது, ஏனெனில் இரண்டு நாடுகளும் அதிக அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளன. பொதுவாக தங்கத்தை வாங்கி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாற்றுவதற்கான செலவு அதிகம்.
இதனால் பணக்காரர்கள் பலர் நீண்ட கால ஒப்பந்தத்தை தெரிவு செய்கின்றனர். இதுவரை சிங்கப்பூரில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 12,500 கோடி என்றே கூறப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. லெபனான், அல்ஜீரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் இனி தங்கள் வங்கி முறைகளை நம்புவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனாலையே அவர்கள் சிங்கப்பூரை தெரிவு செய்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |