கன்சர்வேடிவ் கட்சித் தலைவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்த ரிஷி சுனக்! வெளியான காரணம்
அமைச்சர் சட்டத்தை மீறியதால் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ஜஹாவியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பதவி நீக்கம் செய்தார்.
நதீம் ஜஹாவி
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிரித்தானிய கருவூலத்துறையின் தலைவராக இருந்தவர் நதீம் ஜஹாவி.
இவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார். மில்லியன் கணக்கில் வரி மோசடியில் ஈடுபட்டதாக ஜஹாவி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சுயாதீன ஆலோசகர் சர் லௌரி மேக்னஸை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் நடந்த ஆலோசகரின் விசாரணையின் முடிவில், அமைச்சர்களின் சட்ட விதிகளில் பாரிய மீறல் நடந்துள்ளது என்பது தெரிய வந்தது.
பதவி நீக்கம்
இந்த நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜஹாவியை நீக்க பிரதமர் ரிஷி சுனக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வரி விவகாரங்கள் மீதான சுயாதீன விசாரணையில் அமைச்சர் சட்டத்தை ஜஹாவி கடுமையாக மீறியது கண்டறியப்பட்டதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஹாவிக்கு எழுதிய கடிதத்தில், 'விசாரணை முடிவுகளின்படி, மாட்சிமை அரசாங்கத்தின் உங்கள் பதவியில் இருந்து உங்களை நீக்குவதற்கான எனது முடிவை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்' என பிரதமர் சுனக் கூறியிருந்தார்.
@Jeff J Mitchell/Getty Images
அபராதம்
பிபிசி அறிக்கையின்படி, ஜஹாவி HMRC ( Her Majesty's Revenue and Customs) உடனான ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்காக பணம் செலுத்தியதை ஜஹாவி உறுதிப்படுத்தினார்.
மேலும், அவர் செலுத்திய மொத்த அபராதத் தொகை உட்பட சுமார் 5 மில்லியன் பவுண்டுகள் என்றும் அறிக்கை கூறுகிறது.