நெருங்கும் தேர்தல்... ரிஷி சுனக் எதிர்கொள்ளும் இன்னொரு தலைவலி: 50,000 கடந்த எண்ணிக்கை
பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்புக்கு வந்த பின்னர் சிறு படகுகளில் எல்லை கடக்கும் மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியாகியுள்ளது.
மிகப்பெரிய ஏமாற்றத்தை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரிஷி சுனக் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் பல வெளியாகிவரும் சூழலில், தற்போது இன்னொரு நெருக்கடியை கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்கொள்கிறது.
ஏற்கனவே தேர்தல் திகதி தொடர்பான சூதாட்டத்தில் பாதுகாப்பு அதிகாரி உட்பட, கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய அதிகாரிகள், பரப்புரை மேலாளர் என நால்வர் விசாரணை வட்டத்தில் சிக்கி, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தனர்.
தற்போது சிறு படகு விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் நிலையை எட்டியுள்ளது. மட்டுமின்றி, வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் தான் சாதனை எண்ணிக்கையில் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது, ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கும் போது வாரத்திற்கு சராசரியாக 404 பேர்கள் சிறு படகுகளில் எல்லை தாண்டியுள்ள நிலையில், தற்போது ரிஷி சுனக் ஆட்சியில் இந்த எண்ணிக்கை 575 என்ற மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
வாக்குறுதிகளை மீறிய பிரதமராக
இதனிடையே, ரிஷி சுனக்கால் பெரிதும் கொண்டாடப்படும் ருவாண்டா திட்டமானது முட்டாள்தனமானது என பிரதமருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தே பதிவாகியுள்ளது அடுத்த சிக்கலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லேபர் கட்சி சார்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிய பிரதமராக ரிஷி சுனக் எப்போதும் அறியப்படுவார் என கேலி செய்துள்ளனர்.
மேலும், சிறு படகு விவகாரத்தை மொத்தமாக ஒழிப்பேன் என உறுதி அளித்தவர், தற்போது அவர் கண்ணெதிரே 50,000 மக்கள் சிறு படகுகளில் எல்லை கடந்துள்ளனர் என்பது பிரதமர் செயலற்ற நிலையில் உள்ளார் என்பதையே அம்பலப்படுத்துவதாக லேபர் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |