ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய ரோகித்-கே.எல்.ராகுல்! மிரண்டு போயிருக்கும் மற்ற அணிகள்
உலகக்கோப்பை டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் வரும் 23-ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
இதற்கான பயிற்சி போட்டிகள் மற்றும் குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பயிற்சி போட்டி நடைபெற்றது.
ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அதன் படி முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களான டேவிட் வார்னர் 1 ஓட்டம் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சிலும், அடுத்து வந்த மிட்சல் மார்ஸை அஸ்வின் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
பதிலுக்கு ஜடேஜா நானும் இருக்கிறன் என்பது போல் மற்றொரு துவக்க வீரரான பின்சை 8 ஓட்டங்களில் காலி செய்ததால், ஒரு கட்டத்தில், அவுஸ்திரேலியா அணி 11 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின், மூன்றாவது வீராக களமிறங்கிய ஸ்மித், மேக்ஸ்வேலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் எண்ணிக்கை 72-ஆக இருந்த போது மேக்ஸ்வேல் 37 ஓட்டங்களிலும் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து 57 ஓட்டங்களில் பவுலியன் திரும்ப இறுதியாக அவுஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.
மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன் பின் 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோகித்சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கே.எல்.ராகுல் 31 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ரோகித்சர்மாக தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 60 ஓட்டங்கள் எடுத்த போது ரிட்டயட் ஹர்ட் ஆனார்.
அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 38 ஓட்டங்களும், ஹர்டிக் பாண்டியா 8 பந்துகளில் 14 ஓட்டங்களும் குவிக்க இந்திய அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 153 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதற்கு முன்பு நடந்த பயிற்சி போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து ரிட்டயர் ஹர்ட் ஆனார்,
தற்போது ரோகித்தும் இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை கொடுப்பதால், இந்திய அணிக்கு யார் தான் உலகக்கோப்பை டி20 போட்டியில் துவக்க வீரர்களாக இறங்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.
மேலும், நடைபெற்று முடிந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியாவின் விக்னெஸ் எது என்பதை கண்டுபிடிப்பதற்குள் ஆட்டத்தை பேட்ஸ்மேன்கள் முடித்துவிடுவதால், இந்திய அணியுடன் உலகக்கோப்பையில் மோதும் மற்ற அணிகள் மிரண்டு போய் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.