நான் இதை மட்டும் தான் சொன்னேன்! வெற்றிக்கு பின் பேசிய ரோகித்: தோல்விக்கான காரணத்தை கூறிய டிம் சவுத்தி
நியூசிலாந்து அணிக்கெதிரான வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இது ஒரு கூட்டணி வெற்றி என்று கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஜார்க்கண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கு பின் பேசிய ரோகித்சர்மா, இது ஒரு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவேன்.
அவர்களின் பேட்டிங் தரம் பற்றி எங்களுக்கு தெரியும். துவக்கத்தில் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். நான் அப்போது பந்து வீச்சாளர்களிடம் ஒரு விக்கெட் எடுத்தால் ஆட்டம் மாறிவிடும் என்று கூறிக் கொண்டே இருந்தேன்.
அதே போன்று நாங்கள் சிறப்பான பந்து வீச்சையும், மனோபாவத்தையும் காட்டினோம். அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது ஒரு இளம் அணி, வீரர்கள் அதிக ஆட்டங்கள் இன்னும் விளையாடவில்லை.
அடுத்த ஆட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். இதன் மூலம் இந்திய அணிக்கு எது சரியாக இருக்கிறதோ, அதை செய்வோம். விளையாடாத வீரர்களும் விரைவில் விளையாடுவார்கள்.
நிறைய டி20 போட்டிகள் வரவுள்ளதாக குறிப்பிட்டார். நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆன டிம் சவுதி கூறுகையில், இந்திய அணி முதல் ஆறு ஓவர்களுக்கு பிறகு சிறப்பாக முன்னேறி வந்துவிட்டனர்.
நல்லதொரு கிரிக்கெட் விளையாடினார்கள். பந்து வீச்சில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் அவர்கள் எங்களுக்கு எந்த ஒரு வாய்ப்புகளும் கொடுக்கவில்லை. போட்டியின் மைதானத்தில் அதிக பனி இருந்தது. முதல் பேட்டிங்கின் போதும் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பேட்டிங்கின் போது, ஈரப்பதம் அதிகமாகவே இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் அது சற்று அதிகமாகவே இருந்தது. பனி ஒரு காரணியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய நாள் இந்தியாவிற்கான நாள் என்று கூறியுள்ளார்.