இளவரசர் ஹரி மேகனின் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்காது: அடித்துச் சொல்லும் ராஜ குடும்ப நிபுணர்
காதலிக்கத் தொடங்கிய நாள் முதல் தலைப்புச் செய்தியானவர்கள் இளவரசர் ஹரியும் மேகனும்... அவர்கள் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகியபோதும் கூட பரபரப்பு அதிகரிக்கத்தான் செய்ததேயொழிய குறையவில்லை.
அடுத்து, தங்கள் குழந்தை ஆர்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் தம்பதியர். அப்புறம் வெளிவந்தது இடிபோல் ஒரு செய்தி, அதுதான் ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டி! இந்நிலையில் இளவரசர் பிலிப் உயிரிழக்க, பலரும் ஹரியும் மேகனும் அவரது இறுதிச்சடங்குக்கு வருவார்களா மாட்டார்களா என்ற குழப்பத்திலேயே இருந்தார்கள்.
கடைசியில், ஹரி மட்டுமே பிரித்தானியா திரும்பினார், மேகன் வரவில்லை! கர்ப்பமாக இருப்பதால் பயணம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனை கூறியதால் மேகன் வரவில்லை என்ற செய்தி மட்டுமே வந்தது.
இந்நிலையில், ஓபரா பேட்டியால் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிளவை சரி செய்வதற்காக பிராக்மோர் மாளிகையில் இளவரசர் ஹரி குடும்பத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் ஹரி மேகன் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
Lady Colin Campbell என்னும் அந்த நிபுணர், இளவரசர் ஹரி மேகனின் திருமணம் நிலைக்காது என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். ஹரியின் மனைவி மேகன், எது நிஜம் என்பதை உணராமல் உண்மையிலிருந்து விலகியே வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார் Campbell.
மேகன் ஓபராவுக்கு அளித்த பேட்டி, பிரித்தானியாவில் அவரது பெயருக்கு தீரா களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றும், ஹரி மேகன் திருமணம் நிலைக்காது என்று தான் கருதுவதற்கு முக்கிய காரணம், அவர் ஓபரா பேட்டியின்போது கூறிய பொய்கள்தான் என்றும் கூறுகிறார் Campbell.
’ஏடாகூடமாக எதையாவது செய்து, மற்றவர்களுக்கு சங்கடமான ஒரு நிலைமையை ஏற்படுத்துபவரான இந்த பெண், பொய்களையே கூறியிருக்கிறார். அவரால் தன் வாயை மூடிக்கொண்டிருக்க முடியவில்லை.
அவர் கூறிய சில விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிந்தும், ஹரியும் அவருக்கு பின்பாட்டு பாடியிருக்கிறார்’ என்று சரமாரியாக சாடுகிறார் Campbell.
அமெரிக்காவில் மனைவி குழந்தைகளுடன் வாழும் ஹரி, உண்மையில் எசகு பிசகாக சிக்கிக்கொண்டிருக்கிறார் என்று கூறும் Campbell, இனி ஹரி ராஜ குடும்பத்துக்கு திரும்ப விரும்பினால் கூட, அது அவ்வளவு ஒன்றும் எளிதாக முடியாது என்கிறார்.
அப்படி ஹரி திரும்பினாலும், லண்டன் அதை நாகரீகமாக ஏற்றுக்கொள்ளும், ஹரியை மரியாதையுடன்தான் நடத்தும் என்று கூறும் Campbell, ஆனால், அரண்மனை அவரை ஒரு வெளி ஆளாகத்தான் நடத்தும் என்கிறார்.
நான் கூறுவது சரியாக இருந்து ஹரியும் மேகனும் பிரிய முடிவு செய்தால், அதனால்
ஹரிதான் பயங்கரமாக பாதிக்கப்படுவார் என்கிறார் Campbell.