உங்களை தனியாக விடமாட்டோம்... இளவரசர் பிலிப் மரணத்தைத் தொடர்ந்து ராஜ குடும்ப உறுப்பினர்கள் எடுத்துள்ள முடிவு
காதல் கணவருடன் 73 ஆண்டுகள் இணைந்து பயணித்த பிரித்தானிய மகாராணியார், இனி கணவர் இளவரசர் பிலிப் இல்லாமல் தன் கடமைகளைத் தொடரவேண்டிய ஒரு சூழல்... கணவரின் மரணம் தன் வாழ்வில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதாக மகாராணியார் தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இருந்தாலும், ஏப்ரல் 22ஆம் திகதியுடன் கணவருக்கான துக்கம் அனுஷ்டிக்கும் காலகட்டம் முடிந்ததும், தான் செய்யவேண்டிய பணிகளை மீண்டும் தொடர இருக்கிறார் மகாராணியார்.
இதற்கு முன் சில நேரங்களில் கணவர் இல்லாமல் தனியாகக்கூட சில பணிகளை மகாராணியார் செய்து நிறைவேற்றியுள்ளார் என்றாலும், அப்போதெல்லாம் பணி முடித்து வீடு திரும்பும்போது, அவருக்காக அவரது காதல் கணவர் காத்திருப்பார்.
ஆனால், இனி அவரைக் காணமுடியாதே! இப்படிப்பட்ட ஒரு சூழலில், என்னதான் ஒரு கணவரின் இழப்பை இன்னொருவர் ஈடு செய்ய முடியாது என்றாலும், பணியின்போது மகாராணியாரை இனி தனியாக விடுவதில்லை என ராஜ குடும்பம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இனி பொது நிகழ்ச்சிகளில் மகாராணியார் பங்கேற்கும்போது, அவருடன் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவராவது இருப்பது என மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆகவே, இனி மகாராணியார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அவருடன், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் எட்வர்ட், அவரது மனைவி சோபி அல்லது இளவரசி ஆன், இவர்களில் யாராவது ஒருவர் இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.