இளவரசர் ஹரியின் மகளை ஒதுக்கிவைத்துள்ள ராஜ குடும்பம்... ஆதாரத்துடன் வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் இரண்டாவது மகளை ராஜ குடும்பம் ஒதுக்கிவைத்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல் ஒற்றுமையாக வாழ்ந்த இளவரசர்கள் வில்லியம், அவரது மனைவி கேட், வில்லியமுடைய தம்பி ஹரி வாழ்வில் புயலாக நுழைந்தார் மேகன்.
ராஜ குடும்ப மரபுகளை மீறி, விவாகரத்து செய்யப்பட்ட, ராஜ குடும்பத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு நடிகையை குடும்பத்துக்குள் கொண்டுவந்தார் இளவரசர் ஹரி.
அதற்குப் பின் உண்மையாகவே புயலடித்ததுபோல் கலகலத்துப்போனது ராஜ குடும்பம். மேகன் மீது தினமும் ஒரு புகார் வர, ஹரியோ மனைவிக்கு கண்மூடித்தனமாக ஆதரவு காட்ட, மகாராணி தலையிடும் வரை சென்றது பிரச்சினை.
கடைசியில் ராஜ அரண்மனையை விட்டு வெளியேறிய ஹரியை, பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவுக்கே அழைத்துச் சென்றுவிட்டார் அவரது மனைவி மேகண்.
ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும், குடும்பத்தினர் மீது சேற்றை வாரி இறைத்தார்கள் ஹரியும் மேகனும்.
கடைசியில், உலகமே பார்க்கும் வகையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு இருவரும் கொடுத்த பேட்டி, சந்தி சிரிக்கவைத்தது. அதற்குப் பிறகு உறவுகளுக்குள் விரிசல் அதிகமானது. இந்நிலையில், ஹரி மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.
வீறாப்பாக சொந்தக்காலில் நிற்பதாகக் கூறிச்சென்ற ஹரி மேகனுக்கு, நிதர்சன உலகை எதிர்கொள்வது எளிதாக இல்லை. ஆகவே, மெதுவாக மீண்டும் ராஜ குடும்பத்துடன் ஒட்டிக்கொள்வதற்காக முயற்சி எடுக்கத்தொடங்கினார் ஹரி.
தனது மகளுக்கு, பிரித்தானிய மகாராணியாரின் செல்லப்பெயரான லிலிபெட் என்ற பெயரை வைக்க, அது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹரியின் மகள் லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர், ராஜ குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆன பிறகும், லிலிபெட் ராஜ குடும்ப வரிசையில் இணைக்கப்படவில்லையாம்.
ராஜ குடும்ப அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, அடுத்து யார் பதவிக்கு வருவார்கள் என்பதைக் காட்டும் line of succession என்ற பட்டியலின் கீழோ, லிலிபெட்டின் பெயர் இதுவரை இணைக்கப்படவில்லை.
இது தவறுதலாக நிகழ்ந்ததா, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான Daniela Elser, சமீபத்தில் கூட, ராஜ குடும்ப இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், லிலிபெட் பெயர் மட்டும் இணைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஒருவேளை லிலிபெட் பிறந்து ஒன்றரை மாதங்களே ஆனதால் அவரது பெயர் இணைக்கபடாமல் இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பினால், இல்லை, இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகள் ஜார்ஜ், சார்லட், லூயிஸ் மற்றும் ஹரியின் மூத்த மகன் ஆர்ச்சி பெயர் கூட, அவர்கள் பிறந்த உடனே ராஜ குடும்ப இணையதளத்தில் இணைக்கப்பட்டுவிட்டன என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Daniela Elser.
ஆனால், லிலிபெட் பிறந்து ஒன்றரை மாதம் ஆன நிலையிலும், அவரது பெயர் ராஜ குடும்ப இணையதளத்திலோ, அல்லது பதவி வகிக்க வாய்ப்புள்ளவர்கள் பட்டியலிலோ சேர்க்கப்படவில்லை என்பதால், லிலிபெட் வேண்டுமென்றே ஓரங்கட்டப்படுவதாக கருதப்படுகிறது.