சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்
பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்வீழ்த்த, சஞ்சு சாம்சன் நிதானமாக ஆட கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் களமிறங்கினர்.
கில் 11 ஓட்டங்களிலும், ரானா 22 ஓட்டங்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த சுனில் நரைன் 6 ஓட்டங்களிலும், அணித்தலைவர் மோர்கன் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.
ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய திரிபாதி 36 ஓட்டங்களிலும் தினேஷ் கார்த்திக் 25 ஓட்டங்களிலும் வெளியேறினர். எஞ்சிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
பட்லர் (5), ஜெய்ஸ்வால் (22), ஷிவன் துபே (22), டெவாட்டியா (5) ஓட்டங்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார்.
அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம்சன் 42 ஓட்டங்களுடனும், மில்லர் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இது ராஜஸ்தான் பெற்ற இரண்டாவது வெற்றியாகும். கொல்கத்தா அணி பெற்ற 4வது தோல்வி இதுவாகும்.