திங்கட்கிழமை முதல் பிரித்தானியா வரும் பயணிகளுக்கு விதிகளில் ஒரு முக்கிய மாற்றம்...
வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல், பிரித்தானியா வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா பயண பரிசோதனை திட்டம் விலக்கிக்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள், பிரித்தானியாவுக்குள் நுழைந்த இரண்டாவது நாள், rapid lateral flow test என்னும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர்கள் கூடி விவாதிக்க உள்ள நிலையில், முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு அந்த இரண்டாவது நாள் பரிசோதனைகள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பிரித்தானியா வந்த பயணிகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காக, அவர்கள் பிரித்தானியா புறப்படும் முன் ஒன்லைனில் நிரப்பவேண்டிய passenger locator form என்னும் படிவமும் எளிதாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவுக்கு வருவோர், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் ஒன்லைனில் அந்த படிவத்தை நிரப்பவேண்டும். ஆனால், அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பதிலளிக்க சிக்கலானவையாக இருப்பதாகவும், அர்த்தமற்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும், பயணிகள் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.