பிரித்தானியாவில் உணவு பற்றாக்குறைக்கு ரஷ்யா காரணமா? வெளிவரும் முக்கிய பின்னணி
கொரோனா பரவலுக்கு பிறகு பிரித்தானியாவின் பொருளாதார மீட்சியை சேதப்படுத்தும் வகையில் ரஷ்யா எரிவாயு விலைகளில் மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்னும் இரண்டு வார காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பில் Gazprom நிறுவனம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் அமைச்சர்கள் குழுவும் சிக்கலைச் சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளது.
மட்டுமின்றி, உணவு உற்பத்திக்கான கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறையால் நாட்டின் வடக்கில் இரண்டு உர ஆலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே சாரதிகள் பற்றாக்குறையும் ஏற்பட்டு உணவுப்பொருட்கள் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. மாமிச உணவு தொழிற் கூடங்களும் தற்போது கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப மாதங்களாக ஐரோப்பாவில் எரிவாயு விலையில் உயர்வால், ஐரோப்பிய மின்சார செலவுகளை பல வருட உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்தில் மின்சார விலை திங்கள் அன்று இயல்பை விட 11 மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையிலேயே ரஷ்யாவின் Gazprom நிறுவனம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், சமீப விலை உயர்வுகளுக்கு ரஷ்யாவே காரணமாக இருக்கலாம் எனவும் பிரித்தானியாவின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆனால் Gazprom நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை மட்டுமே தாங்கள் நிவர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.