பிரித்தானியாவின் ஒற்றை முடிவால்... ஐரோப்பாவின் இரு நாடுகளை ரஷ்யா தாக்கலாம்
பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதால், பதிலுக்கு ஜிப்ரால்டர் அல்லது சைப்ரஸ் நாடுகளை ரஷ்யா தாக்கலாம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை
பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சைப்ரஸ் மற்றும் ஜிப்ரால்டரில் உள்ள அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன் மீது மிக ஆபத்தான Oreshnik ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக விளாடிமிர் புடின் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக தங்கள் ஏவுகணை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மீது அணு ஆயுதம் பொருத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக் கூடும் என்றும் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அவசர பேச்சுவார்த்தை தொடர்பில் கசிந்த தகவலில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு அதிகம் இலக்காகும் நாடாக தற்போதைய சூழலில் சைப்ரஸ் இருப்பதாகவே தெரிய வந்துள்ளது.
எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம்
மேலும், ஹிஸ்புல்லா அல்லது வேறு ஏதேனும் குழுக்களுக்கு ஆயுதம் அளித்து ஈரான் வழியாக ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அத்துடன் ஹவுதிகளுக்கு ஆயுதம் அளித்து சைப்ரஸ் மீது தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அதிகாரிகள் விவாதித்துள்ளனர். சமீபத்திய வாரங்களில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்திருந்தாலும், இது வெறும் வாடிக்கையான சந்திப்பு என்றே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜிப்ரால்டர் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் இராணுவ தளங்கள் குறிவைக்கப்படுவது உறுதி என்றும், தாக்குதல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம் எறும் தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |