பிரித்தானிய தூதரக அலுவலர்களுக்கு ரஷ்யா கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ரஷ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய தூதரக அலுவலர்களுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள்
பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடியும். அதைத் தாண்டி அவர்கள் பயணிக்க விரும்பினால், ஐந்து நாட்களுக்கு முன்பே அவர்கள் அதுகுறித்து நோட்டீஸ் கொடுப்பதுடன், தங்கள் பயணம் குறித்த முழு விவரங்களையும் விளக்கமாக தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான பிரித்தானிய தூதர் மற்றும் மூன்று மூத்த தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உறவில் ஏற்பட்ட விரிசலின் விளைவுகள்
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், தற்போது ரஷ்யா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, தூதர்கள் பயணிப்பதை அரசாங்கங்கள் தடுப்பதில்லை. ஆனால், இதுபோல் பயணக் கட்டுப்பாடுகள் விதித்தல் அவர்கள் பயணிப்பதை கடினமாக்கலாம். அதனால், அவர்கள் விசா பெறுவதற்கு கால தாமதமாகலாம், அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் ரஷ்ய அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.
ஆக, ரஷ்யாவில் வாழும் தூதரக அலுவலர்களின் வாழ்வைக் கடினமாக்க ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இது ஒன்று எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |