லண்டன் ஆடம்பர ஹொட்டல் தேநீரில் பொலோனியம் விஷம்: முன்னாள் உளவாளியை பழி தீர்த்த ரஷ்யா
லண்டனில் உள்ள ஆடம்பர ஹொட்டலில் தேநீரில் பொலோனியம் விஷம் கலந்து Alexander Litvinenko என்ற முன்னாள் ரஷ்ய உளவாளியை கொன்றது ரஷ்ய நிர்வாகந்தான் என ஐரோப்பா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ல் லண்டனில் நடந்த குறித்த படுகொலை தொடர்பில் Alexander Litvinenko-ன் மனைவி அளித்த புகாரின் பேரிலேயே தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Alexander Litvinenko படுகொலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தொடர்பிருப்பதாக, இந்த வழக்கில் தொடக்கம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
ரஷ்ய உளவுத்துறையான கெஜிபியில் பணியாற்றியுள்ள Alexander Litvinenko ஐ லண்டன் மில்லினியம் ஹொட்டலில் சந்திக்க வந்தவர்கள் அவரது தேநீரில் விஷம் கலந்திருந்ததை பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் 2016ல் உறுதி செய்தனர்.
குறித்த ஹொட்டலில் தனிப்பட்ட முறையில் Alexander Litvinenko-ஐ சந்தித்துள்ள Andrei Lugovoy மற்றும் Dmitry Kovtun ஆகிய இருவரும் ரஷ்ய நிர்வாகத்தின் சார்பில் இந்த கொலையை முன்னெடுத்துள்ளனர் என்றே பிரித்தானிய அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டுமின்றி Alexander Litvinenko-ன் மனைவிக்கு ரஷ்யா 1,22,500 பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் Alexander Litvinenko கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது.
கெஜிபியில் இருந்து விலகி பிரித்தானியாவுக்கு குடியேறிய Alexander Litvinenko, பின்னர் பிரித்தானிய குடியுரிமை பெற்றார். தொடர்ந்து பிரித்தானிய உளவுத்துறையில் பணியாற்றியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.